செய்திகள்

பெங்களூரு அருகே 3 லாரிகளுக்கு தீ வைத்த வாலிபர் கைது

Published On 2017-03-25 08:33 GMT   |   Update On 2017-03-25 08:33 GMT
பெங்களூரு அருகே குடிக்க பணம் தராததால் 3 லாரிகளுக்கு தீ வைத்த வாலிபரை சி.சி.டி.வி. காமிரா மூலம் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த சர்ஜாபூர் பகுதியில் 3 லாரிகளுக்கு ஒரு வாலிபர் தீ வைத்து விட்டார்.

இதில் 3 லாரிகளில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின. லாரிகளும் எலும்பு கூடாக காட்சியளித்தது. தீ அணைப்பு படையினர் வந்து தீயை அணைத்த போதிலும், லாரியில் இருந்த பொருட்களை காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் தனியார் கட்டிடங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வாலிபர் அந்த லாரிகளுக்கு தீ வைத்த காட்சி பதிவாகி இருந்தது.

அந்த காமிரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தீ வைத்த வாலிபரை கைது செய்தனர். அவரது பெயர் இம்தியாஸ். பெங்களூருவை அடுத்த சர்ஜாபூர் பகுதியை சேர்ந்தவர்.

இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று தனது நண்பர்களிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர்கள் தரவில்லை. இதனால் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த இடம் அருகே நின்று கொண்டிருந்த இன்னொரு நண்பரிடமும் பணம் கேட்டார். அவரும் பணம் தரவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தில் அவர் லாரிகளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

Similar News