செய்திகள்

மேடை சரிந்து விழுந்த விபத்தில் லல்லு பிரசாத் யாதவ் காயம்

Published On 2017-03-25 05:07 GMT   |   Update On 2017-03-25 05:07 GMT
பீகார் மாநிலத்தில் நடந்த நிகழ்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்மந்திரி லல்லு பிரசாத் யாதவ் மேடை திடீரென சரிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தார்.
பாட்னா:

பீகார் மாநில முன்னாள் முதல்மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் இன்று காலை திகா நகரில் நடந்த யாக பூஜையில் பங்கேற்றார். லல்லுவுடன் அவரது இரு மகன்களான துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், அம்மாநில மந்திரி தேஜ் பிரதாப் மற்றும் மகளும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதி கலந்து கொண்டனர்.

மேடையில் லல்லு அமர்ந்திக்கும் போது அவரது கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் முந்தியடித்துக் கொண்டு மேடை மீது ஏற முயற்சி செய்தனர். இதனால், பாரம் தாங்காமல் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இவ்விபத்தில் லல்லு பிரசாத் யாதவ் கீழே விழுந்து காயமடைந்தார்.

நெரிசலில் இருந்து அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. உரிய சிகிச்சைக்கு பின்னர் லல்லு வீடு திரும்பினார்.

Similar News