செய்திகள்

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சோனியா காந்தி டெல்லி திரும்பினார்

Published On 2017-03-24 09:34 GMT   |   Update On 2017-03-24 09:34 GMT
சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியுடன் டெல்லி திரும்பினார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநில தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.



அதன் பின்னர் பூரண ஓய்வில் இருந்த சோனியா காந்தி கடந்த உடல் பரிசோதனை மற்றும் சில சிகிச்சைக்காக எட்டாம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். வழக்கமாக சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும்போது அவரது மகன் ராகுல் காந்தி அல்லது மகள் பிரியங்கா வதேரா ஆகியோர் உடன் செல்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுலும், பிரியங்காவும் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் தனது உதவியாளர்களுடன் சோனியா காந்தி அமெரிக்கா சென்றிருந்தார்.

பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி அம்மாநில முதல் மந்திரியாக கேப்டன் அம்ரிந்தர் சிங் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, உடனடியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மருத்துவமனையில் இருந்த சோனியாவுக்கு உதவியாக இருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் நேற்று மாலை டெல்லி திரும்பியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Similar News