செய்திகள்
சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் - ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார்

கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: ஏர் இந்தியா மேலாளர் வேதனை

Published On 2017-03-24 06:50 GMT   |   Update On 2017-03-24 06:50 GMT
சிவசேனா எம்.பி.யால் தாக்குதலுக்குள்ளான ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார் “நம்முடைய நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்,” என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஏர் இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிக்க முடியாத ஆத்திரத்தில், ஏர் இந்தியா மேலாளர் சிவகுமாரை (வயது 60) அடித்து சட்டையை கிழித்தார்.



சிவகுமாரின் மூக்கு கண்ணாடியையும் நொறுக்கினார். தனது செருப்பால், 25 முறைக்கும் அதிகமாக மேலாளரின் கன்னத்தில் மாறிமாறி அடித்தார்.

இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிவசேனா எம்.பி.யின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சிவசேனா என்னுடன் உள்ளது என்று ரவீந்திர கெய்க்வாட் கூறி வருகிறார்.

மேலும், தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என டெல்லி போலீசுக்கு சவால் விடுத்து உள்ளார்.

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பொது இடத்தில் தாக்கியபோது கடும் வேதனை அடைந்த சிவகுமார், ‘நம்முடைய எம்.பி.க்களின் நடத்தை மற்றும் கலாச்சாரம் இப்படியாக இருந்தால் நம்நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.



Similar News