செய்திகள்

உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகராக பிரேம் சந்த் அகர்வால் தேர்வு

Published On 2017-03-23 07:46 GMT   |   Update On 2017-03-23 07:46 GMT
உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகராக பா.ஜ.க எம்.எல்.ஏ பிரேம் சந்த் அகர்வால் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் சட்டசபை கட்சித் தலைவராகவும், முதல் மந்திரியாகவும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களால் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உரிமை கடிதத்தை பெற்ற ஆளுநர் பால், திரிவேந்திர சிங் ராவத்தை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். கவர்னர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி மாலை தலைநகர் டேராடூனில் திரிவேந்திர சிங் ராவத் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.



இந்த நிலையில், உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகரைத் தேர்வு செய்ய எம்.எல்.ஏ-க்களிடையே இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் ரிஷிகேஷ் தொகுதி எம்.எல்.ஏ-வான பிரேம் சந்த் அகர்வால் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகர் பதவிக்கு அகர்வாலைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News