செய்திகள்

அதிகாரிகளும் 15 நாளில் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்: உ.பி. முதல்வரின் அடுத்த அதிரடி

Published On 2017-03-20 14:52 GMT   |   Update On 2017-03-20 14:52 GMT
அமைச்சர்களை 15 நாளில் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகள் உள்பட 46 மந்திரிகளும் பதவியேற்றனர்.

முதல் மந்திரியாக பதவியேற்றதுமே யோகி ஆதித்யநாத் தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார். ஊழல் இல்லாத வெளிப்படையான அரசை நடத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் அவர் அனைத்து மந்திரிகளும் 15 நாளில் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவில் கூறியிருக்கிறார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த அதிரடியாக அதிகாரிகளும் 15 நாட்களில் தங்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்று இன்று உத்தரவிட்டுள்ளார்.

பதவியேற்ற பிறகு முதல் முறையாக மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஆதித்யநாத் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். மேலும், பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதேபோல் டி.ஜி.பி. ஜாவீத் அகமதுவை அழைத்து பேசிய முதல் மந்திரி ஆதித்யநாத், சட்டம் ஒழுங்கு நிலையை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News