செய்திகள்

2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் கவலைக்கிடம்: அசாமில் கொடூரம்

Published On 2017-03-20 11:43 GMT   |   Update On 2017-03-20 11:43 GMT
தனது குழந்தைகளைக் கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது கவுகாத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கவுகாத்தி:

அசாம் மாநிலம் ஹோஜை மாவட்டத்தை சேர்ந்தவர் சதானி தாஸ். இரண்டு குழந்தைகளின் தாயான இவர் இன்று காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்குப் போராடினர். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீசார் கூறுகையில், “நேற்றிரவு தனது 9 வயது மகன் ராடானுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த சதானி, 5 வயது மகள் ஷெனிமையை அருகிலுள்ள கோலங் ஆற்றில் வீசி எறிந்துள்ளார். தொடர்ந்து தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை வெகு நேரமாகியும் சதானியின் இல்லம் திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கதவை உடைத்துள்ளனர். சதானி மட்டும் வாயில் நுரை தள்ள உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க, அவரது இரு குழந்தைகளையும் வீட்டினுள் காணவில்லை.

இதைத் தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தற்போது கோலாங் ஆற்றில் வீசி எறியப்பட்ட 5 வயது ஷெனிமையை தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

பொருளாதார காரணங்களால் சதானி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News