செய்திகள்

பாகிஸ்தானில் மாயமான முஸ்லிம் மதகுருக்கள் டெல்லி திரும்பினர்

Published On 2017-03-20 06:49 GMT   |   Update On 2017-03-20 06:49 GMT
பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய முஸ்லிம் மதகுருக்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் அங்கிருந்து இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி:

புது டெல்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவின் தலைமை மதகுரு சையத் ஆசிப் நிஸாமி மற்றும் அவரது மருமகன் நஸிம் நிஸாமி இருவரும் லாகூரில் அமைந்துள்ள டாட்டா தர்பார் தர்காவுக்கு செல்வதற்காக கடந்த மார்ச் 8-ம் தேதியன்று பாகிஸ்தானுக்கு சென்றனர்.

ஆனால், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இறங்கிய இருவரும் திடீரென மாயமாகினர். இவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய மதகுருக்கள் இருவரைப் பற்றியும் தகவல் அளிக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட முத்தாகிதா குவாமி கட்சிப் பிரமுகர்களிடம் மறைமுக தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்நாட்டு உளவுத்துறையினரின் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர், கராச்சி அருகே அவர்கள் இருவரும் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக பின்னர்தெரியவந்தது.


அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் துரிதமாக செய்தனர். இதன் விளைவாக, இன்று அவர்கள் இருவரும் விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தனர்.

பாகிஸ்தானில் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பது அவர்கள் இனி அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News