செய்திகள்

சவுதாலாவின் பரோலை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்: உடனே சரணடைய உத்தரவு

Published On 2017-03-01 16:05 GMT   |   Update On 2017-03-01 16:05 GMT
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் பரோலை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

அரியானா மாநிலத்தில் நடந்த ஆசிரியர்கள் பணி நியமனத்தில், முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா (82) ஊழலில் ஈடுபட்டது நிரூபணம் ஆனது. இதையடுத்து அவருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறைவாசம் அனுபவித்து வந்த சவுதாலா, உடல்நலத்தை காரணம் காட்டி பரோலில் செல்ல அனுமதி கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவருக்கு பரோல் வழங்க டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும், சவுதாலாவுக்கு கடந்த 6-ம் தேதி பரோல் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியை விட்டு எங்கும் செல்லக்கூடாது, பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், சவுதாலா பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதன் மூலம் பரோல் சலுகையை தவறாக பயன்படுத்தியிருப்பதாகக் கூறி, தனி நபர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி விபின் சங்கி, சவுதாலாவுக்கு அளித்த பரோல் மற்றும் சிறை அதிகாரிகள் அளித்த பர்லோ (விடுமுறை அனுமதி) ஆகியவற்றை ரத்து செய்தார். அத்துடன், உடனடியாக சரண் அடையும்படியும் உத்தரவிட்டார்.

Similar News