செய்திகள்

மரபணு நோய் பாதித்த 26 வார கருவை கலைக்க பெண்ணுக்கு அனுமதி மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு

Published On 2017-02-28 08:20 GMT   |   Update On 2017-02-28 08:20 GMT
மராட்டியத்தைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் வளரும் மரபணு நோய் பாதித்த 26 வார கருவை கலைக்க அனுமதி மறுத்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மராட்டியத்தைச் சேர்ந்த 37 வயது கர்ப்பிணி பெண் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்திருந்தார். அதில், தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனது வயிற்றில் 26 வார கரு வளர்கிறது. அது மரபணு நோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

அக்குழந்தை பிறந்தால் மனம் மற்றும் உடல் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். மேலும் தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். எனவே அக்கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதி எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.

கடந்த 23-ந்தேதி அப்பெண்ணின் வயிற்றில் வளரும் கரு குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தி அறிக்கை பெறப்பட்டது.



இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 26 வார கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மரபணு நோய் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் அறிவு திறன் குறைவானவர்களாக இருப்பார்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள். மேலும் இக்கருவினால் தாயின் உடல்நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எனவே, இக்கருவை கலைக்க டாக்டர்கள் அறிவுறுத்தவில்லை. ஆகவே மருத்துவ அறிக்கையின் பரிந்துரையின் பேரில் 26 வார கருவை கலைக்க அனுமதி வழங்க முடியாது. நமது வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது என தெரிவித்தனர்.

Similar News