செய்திகள்

ஐ.எஸ். அமைப்பில் இணைந்த கேரள வாலிபர் இறந்து விட்டதாக தகவல்

Published On 2017-02-27 10:28 GMT   |   Update On 2017-02-27 10:28 GMT
கேரளாவில் கடந்தாண்டு மாயமாகி ஐ.எஸ். அமைப்பில் இணைந்த வாலிபர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் புனித போரில கொல்லப்பட்டதால் தியாகியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு செல்போனில் வந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 பேர் திடீரென மாயமானார்கள். இவர்களில் சிலர் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். அமைப்பில் இணைந்து விட்டதாகவும், இனிமேல் தங்களை தேட வேண்டாம் எனவும் தகவல் அனுப்பினர்.

இதுபற்றி மாயமான வாலிபர்களின் குடும்பத்தினர் போலீசாருக்கும், மாநில அரசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதில், கேரள வாலிபர்கள் சிலர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்தது உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் காசர்கோடு பதன் கிராமத்தைச் சேர்ந்த ஹபிசுதீன் (வயது 24) என்பவரின் குடும்பத்தினருக்கு நேற்று செல்போனில் ஒரு தகவல் வந்தது. அதில், ஹபிசுதீன் இறந்து விட்டதாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் ஹபிசுதீனுடன் மாயமான இன்னொரு வாலிபரின் செல்போன் எண்ணில் இருந்து வந்திருந்தது.



அந்த தகவலில் ஆப்கானிஸ்தானில் நடந்த புனித போரில் ஹபிசுதீன் இறந்ததால் ஐ.எஸ். அமைப்பினர் அவரை தியாகி என பாராட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக்கண்டு ஹபிசுதீனின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதனை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மத்திய அரசு வெளியுறவுத்துறை மூலம் இத்தகவல் உண்மைதானா? ஹபிசுதீன் போரில் கொல்லப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News