செய்திகள்

மோடி படம் போட்ட ‘டீ’ கப்பால் பாரதிய ஜனதாவில் சர்ச்சை

Published On 2017-02-27 06:45 GMT   |   Update On 2017-02-27 06:45 GMT
மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட டீ கப்பில் மோடியின் படம் அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கணிசமான இடங்களை பிடித்தது. இதைத்தொடர்ந்து புதிய கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்களுக்கு டீ வழங்கப்பட்டது.

டீ வழங்குவதற்காக விசே‌ஷமாக வடிவமைக்கப்பட்ட பேப்பர் கப்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. அந்த கப்பில் மோடியின் படம் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த கப்பில் வழங்கப்பட்ட டீயை குடித்துவிட்டு கப்பை குப்பை தொட்டியில் வீசினார்கள். மோடி படத்துடன் இருந்த இந்த கப் குப்பை தொட்டியில் கிடந்ததால் பாரதிய ஜனதா தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.

இது சம்மந்தமாக நிர்வாகிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அந்த டீ கப்பில் டீ வழங்குவதை நிறுத்தினார்கள். வேறு கப்கள் கொண்டு வரப்பட்டன.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா அலுவலக செயலாளர் முகுந்த் குல்கர்னி கூறும்போது, கூட்டம் நடப்பதால் 1000 டீ கப்களுக்கு ஆர்டர் செய்திருந்தோம். மோடி படம் போட்ட கப் அனுப்பப்பட்டது. இது குப்பை தொட்டியில் வீசப்பட்டு இப்படி ஒரு சர்ச்சை ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை. எனவே மேற்கொண்டு அந்த கப்பை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம் என்று கூறினார்.

Similar News