செய்திகள்

வாஷிங் மெஷின் தண்ணீரில் மூழ்கி 3 வயது இரட்டை குழந்தைகள் பலி

Published On 2017-02-25 22:02 GMT   |   Update On 2017-02-25 22:02 GMT
டெல்லியில் வாஷிங் மெஷினில் இருந்த தண்ணீருக்குள் 3 வயது இரண்டு குழந்தைகளும் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர். இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 3 வயதில் நாக்‌ஷ், நீஷு என்ற இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். நேற்று ரவீந்தர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ரேகா பகல் 12.30 மணி அளவில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷினில் தண்ணீரை நிரப்பினார். வாஷிங் மெஷின் அருகே அழுக்கு துணிகளை மலைபோல் குவித்துவைத்திருந்தார்.

பின்னர் மெஷினில் போடுவதற்கு சோப்பு தூளை தேடியபோது அது காலியாகிவிட்டது தெரிந்தது. உடனே அவர் குழந்தைகளை வீட்டில் விட்டு, விட்டு சோப்பு தூள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அவர் குழந்தைகளை காணாமல் திடுக்கிட்டார். உடனே இதுபற்றி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் வீட்டுக்கு விரைந்துவந்து குழந்தைகளை தேடினார். அப்போது வாஷிங் மெஷினில் இருந்த தண்ணீருக்குள் இரண்டு குழந்தைகளும் மூழ்கி இருந்தன. குழந்தைகளை வெளியில் எடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குவித்து வைக்கப்பட்டு இருந்த அழுக்கு துணிகள் மீது குழந்தைகள் ஏறி வாஷிங் மெஷினுக்குள் இறங்கியதாக தெரிகிறது. 

Similar News