செய்திகள்

இளங்கோவனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2017-02-25 03:03 GMT   |   Update On 2017-02-25 03:02 GMT
‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் நேற்று கூறினார்.
புதுடெல்லி :

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். மேலும் தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப்பின் திருநாவுக்கரசர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் நிர்வாகிகள் பற்றி குறை சொல்லும் பழக்கமும், புகார் கூறும் பழக்கமும் எனக்கு கிடையாது. எனவே நான் யாரைப்பற்றியும் புகார் தெரிவிக்கவில்லை. எந்த புகார் குறித்தும் யாரும் என்னிடம் கேட்கவில்லை. எனக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.



காங்கிரஸ் ஜனநாயக கட்சி. எல்லோரும் அவரவர் கருத்தை சொல்வார்கள். எனவே இளங்கோவன் கருத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

டெல்லி வந்திருந்த மு.க.ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்திக்க விரும்பினர். அதன்பேரில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நானும், தமிழக பொறுப்பாளர் என்ற முறையில் முகுல் வாஸ்னிக்கும் மரியாதை நிமித்தமாக அப்போது உடன் இருந்தோம்.

இந்த சந்திப்பின்போது தமிழக சட்டசபை சம்பவங்கள் மற்றும் அரசியல் நிலவரங்கள் பற்றி பேசப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News