செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி: தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

Published On 2017-02-20 11:19 GMT   |   Update On 2017-02-20 11:19 GMT
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது வரை 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கும் மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க தயாராக உள்ளதாக கேரள அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க தயாராக உள்ளதாக கேரள அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.  இதன்மூலம் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது புதிய திருப்புமுனையாக கருதப்பட்டது.

முன்னதாக, ஆட்சியில் இருந்த உம்மண்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக தற்போதைய கேரள இடதுசாரி அரசு சபரிமலையில் வழிபட அனைத்து பெண்களையும் அனுமதிக்க தயார் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்தகால இடதுசாரி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் எடுத்த நிலைப்பாட்டையே தற்போதைய பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசும் எடுத்திருப்பது நினைவு கூரத்தக்கது.

இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக இன்று முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்ய விரும்பும் விபரங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தொடர்புடைய வாதி மற்றும் பிரதிவாதிகளை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Similar News