செய்திகள்

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சுதா நாராயணமூர்த்தி பதவியேற்றார்

Published On 2017-02-20 03:55 GMT   |   Update On 2017-02-20 03:55 GMT
சமூக சேவகியான சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக நேற்று ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் பதவியேற்றுக் கொண்டார்.
திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர் ஜெ.சேகர்ரெட்டி. இவர், அளவுக்கு அதிகமாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன்பேரில் அவரின் வீடுகளிலும், நண்பர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் பணம், நகை கைப்பற்றப்பட்டது. இதனால், ஜெ.சேகர்ரெட்டியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து, ஆந்திர மாநில அரசு அதிரடியாக நீக்கியது.

அவருக்கு பதிலாக, சமூக சேவகியான சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர மாநில அரசு நியமனம் செய்தது. அவர், நேற்று காலை 6 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து சுதாநாராயணமூர்த்தி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ரெங்கநாயக்கர் மண்டபத்தில் அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் வழங்கினார். பின்னர் அன்னதானக்கூடத்துக்கு நேரில் சென்று சுதாநாராயணமூர்த்தி பார்வையிட்டார். பக்தர்களின் அன்னதானத்திட்டத்துக்கு காய்கறிகள், அரிசி ஆகியவற்றை அவர் காணிக்கையாக வழங்கினார்.

Similar News