செய்திகள்

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபிர் காலமானார்

Published On 2017-02-19 07:07 GMT   |   Update On 2017-02-19 07:07 GMT
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற அல்டமாஸ் கபிர் உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் இன்று காலமானார்.
கொல்கத்தா:

19-7-1948 அன்று மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவில் பிறந்த அல்டமாஸ் கபிர், சட்டப்படிப்புக்கு பின்னர் 1973-ம் ஆண்டு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். கொல்கத்தாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பிரபல சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞராக பல வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடி, பிரபலம் அடைந்தார்.

1990-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அல்டமாஸ் கபிர் பின்னர் ஜார்கண்ட் மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும் பல வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை அளித்துள்ளார்.

2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்ற அவர் 29-9-2012 அன்று நாட்டின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டார்.

பணி ஓய்வுக்கு பின்னர் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அல்டமாஸ் கபிர்(68) சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று கொல்கத்தாவில் அவர் காலமானார்.

அல்டமாஸ் கபிரின் திடீர் மறைவுக்கு நீதித்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் நேரிலும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News