செய்திகள்

சத்தீஷ்காரில் கண்ணி வெடியில் சிக்கி 2 பெண்கள், சிறுமி பலி

Published On 2017-01-19 20:39 GMT   |   Update On 2017-01-19 20:39 GMT
சத்தீஷ்காரில் கண்ணி வெடியில் சிக்கி 2 பெண்கள் மற்றும் 15 வயது சிறுமி ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சோன்பூர்-குருஷ்ணார் ஆகிய கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு பெண்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி திடீரென வெடித்து சிதறியது. இதில் 2 பெண்கள் மற்றும் 15 வயது சிறுமி ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பெண்களும், 2 வயது குழந்தையும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாலை பணி நடைபெறும் இடம் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதி என்பதால் அங்கு ஏராளமான பாதுகாப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதும், அவர்களை கொல்லும் நோக்கில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Similar News