செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்தது: 40 பேரின் கதி என்ன?

Published On 2016-12-30 06:15 GMT   |   Update On 2016-12-30 06:15 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இன்று தீடீர் என்று சரிந்து விழுந்தது அதில் சிக்கிய சுமார் 40 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள பகரியா போடாய் எனுமிடத்தில் பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது.

ராஞ்சியில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்துக்குள் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணிகளை மகாலட்சுமி நிறுவனம் செய்து வருகிறது.

நேற்றிரவு தொழிலாளர்கள் ஷிப்ட் மாற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் நிலக்கரி ஏற்றிக் கொண்டிருந்த சுமார் 12 வாகனங்கள் அதில் சிக்கின.

40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்போது நிலக்கரி சுரங்கத்துக்குள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.

நேற்றிரவு கடும் பனிப் பொழிவும் இருளும் இருந்ததால் மீட்புப் பணியை உடனடியாக தொடங்க முடியவில்லை. இன்று அதிகாலை 6 மணிக்குத்தான் மீட்புப் பணி தொடங்கியது.

சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்படும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

40 தொழிலாளர்களையும் உயிரோடு மீட்க முயற்சி நடந்து வருகிறது. மதியம் வரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

4 பேர் பிணமாக மீட்கப் பட்டனர். இதனால் மற்றவர் கள் கதி என்ன என்பதில் கேள்விக் குறி எழுந்துள்ளது.

Similar News