செய்திகள்

ஜெயலலிதா உடல்நிலை எதிரொலி: தயார்நிலையில் 900 விரைவு அதிரடிப்படை வீரர்கள்

Published On 2016-12-05 03:01 GMT   |   Update On 2016-12-05 03:01 GMT
ஜெயலலிதா உடல்நிலை காரணமாக, தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்க 900 விரைவு அதிரடிப்படை வீரர்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை குறித்து கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.

தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதாகவும், மாநில அரசுக்கு உதவ போதுமான மத்திய படைகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசு எந்த உதவி கேட்டாலும், அதை அளிக்க தயாராக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 900 விரைவு அதிரடிப்படை வீரர்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், தேவைப்படும்போது, அவர்கள் தமிழ்நாட்டுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜெயலலிதா விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். அவர் வெகு விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Similar News