செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம் எவ்வளவு?

Published On 2016-12-04 09:18 GMT   |   Update On 2016-12-04 09:18 GMT
நாட்டின் மத்திய நிதி தொகுப்பாக விளங்கும் ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம் எவ்வளவு? என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
புதுடெல்லி:

ரிசர்வ் வங்கியின் அலுவல்கள் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் ஒருவர் சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

ரகுராம் ராஜனுக்கு பிறகு இந்த பதவிக்கு யார், யார் பெயர்கள் பரிசீலனை பட்டியலில் இருந்தன? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு, ‘மேற்படி விவகாரம் மத்திய மந்திரிசபை சார்ந்த கோப்பு என்பதால் பதில் அளிக்க இயலாது’ என்று மறுத்து விட்டது.

இதுதவிர, ரிசர்வ் வங்கியின் நிர்வாகம் தொடர்பாக எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.

தற்போதைய கவர்னர் உர்ஜித் பட்டேலின் மாதச் சம்பளம் எவ்வளவு? அவருக்கு எத்தனை கார்கள், எத்தனை பணியாளர்கள் அளிக்கப்பட்டுள்ளனர் என்பதுபோன்ற கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 5-9-2013 அன்று புதிய கவர்னராக பதவி ஏற்றார். அவருக்கு மூன்று கார்களும், நான்கு டிரைவர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வங்கியால் அளிக்கப்பட்ட மும்பை பங்களாவில் ஒன்பது பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர் பணியில் சேர்ந்தபோது 1.69 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் மார்ச் 2014-ல் 1.78 லட்சம் ரூபாயாகவும், மார்ச் 2014-ல் 1.87 லட்சம் ரூபாயாகவும் சம்பளம் உயர்த்தப்பட்டது. பின்னர் 2.04 லட்சமாக இருந்த அவரது சம்பளம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2.09 லட்சமாக உயர்த்தி அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதிவரை இந்த பொறுப்பில் நீடித்த அவரது நான்குநாள் சம்பளமாக 27,933 ரூபாய் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு மும்பையில் பங்களா அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இரு கார்களும், இரு டிரைவர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவரது மாதச் சம்பளமாக 2.09 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Similar News