செய்திகள்

பெருங்காய தகராறு: 15 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 4 பேர் கைது

Published On 2016-12-03 07:50 GMT   |   Update On 2016-12-03 07:50 GMT
பெருங்காயத்தின் விலையில் 5 ரூபாய் அதிகமாக வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் 15 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

தென்கிழக்கு டெல்லி, பரத்பூர் அருகே உள்ள மோலர்பந்த் பகுதியில் வசிப்பவர் அசோக். இவரது மகன் இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தான். 15 வயதாகும் அந்த சிறுவன் கடந்த 23-ம் தேதி தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஒரு மளிகைக்கடையில் பெருங்காயம் வாங்கச் சென்றான்.

கடைக்காரரான லேக்சந்த் என்பவர் பெருங்காயத்தின் வழக்கமான விலையைவிட 5 ரூபாய் கூடுதலாக வாங்கிக் கொண்டதால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை அசோக், கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்க நினைத்த லேக்சந்தின் மகன்களான கவுரவ் மற்றும் விக்கி ஆகியோர் கடந்த 28-ம் தேதி பள்ளிக்கு சென்ற அந்த சிறுவனை வழிமறித்து பரிதாபாத் பகுதிக்கு கடத்தி சென்றனர்.

தங்களது நண்பரான திபக் என்பவருடன் சேர்ந்து அந்த சிறுவனை சரமாரியாக தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவனை ஒக்லா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதற்கிடையில், மகனை காணாமல் தேடிய அசோக் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். ஒக்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு காரணமான கடைக்காரர் லேக்சந்த், அவரது மகன்கள் கவுரவ், விக்கி மற்றும் திபக்கை போலீசார் கைது செய்து, கொலைவழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News