செய்திகள்

செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன்கள் விற்பனை: சென்னைக்கு 4-வது இடம்

Published On 2016-11-30 13:29 GMT   |   Update On 2016-11-30 13:29 GMT
பயன்படுத்திய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் தமிழகத்தின் தலைநகரம் சென்னை 4-வது இடத்தில் உள்ளது.
புது டெல்லி:

கிராமம் முதல் நகரம் வரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் இருக்கக் கூடிய ஒன்றாக ஸ்மார்ட்போன் திகழ்கிறது. புதிதுபுதிதாக ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமானாலும் அவற்றிற்கான விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் குறைந்த பட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சம் 1-2 வருடங்கள்வரை மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதற்குப் பின் புதிய ஸ்மார்ட் போன்களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி விடுகிறது.

இந்நிலையில் பயன்படுத்திய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்பவர்களில் அதிகம் பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என செகண்ட் ஹேண்ட் பொருட்களை விற்பனை செய்யும் காஷிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரநிலைப் பட்டியலில், பயன்படுத்திய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் 19 சதவீதத்துடன் டெல்லி முதலிடத்தையும், 15 சதவீதத்துடன் பெங்களூர் 2-வது இடத்தையும், 11 சதவீதத்துடன் மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரம் சென்னை 8 சதவீதத்துடன் 4-வது இடத்தில் உள்ளது. அடுத்த காலாண்டு முடிவில் ஹைதராபாத், புனே நகரங்கள் செகண்ட் ஹேண்ட் போன் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு முடிவில் இந்தியாவில் சுமார் 99 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News