செய்திகள்

புலிக்காக புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர்

Published On 2016-11-05 06:47 GMT   |   Update On 2016-11-05 06:47 GMT
செல்பிக்களுக்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வனவிலங்கு காப்பகத்தில் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் புலியை படம் பிடிப்பதற்காக கேமராவுக்கு கோணம் பார்க்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராய்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட 16-ம் ஆண்டு விழாவிலும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ராய்ப்பூர் நகருக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு நந்தன்வன் வனவிலங்கு காப்பகத்தை திறந்து வைத்தார்.

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ரமன் சிங்குடன் வனவிலங்கு காப்பகத்தை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி, அங்கு கூண்டுக்குள் அடைபட்டிருந்த ஒரு புலியை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்தார்.



அந்தப் படங்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவ தொடங்கியதும், பிரதமரை மகிழ்விக்கும் வகையிலும், கடுப்பேற்றும் விதத்திலும் விமர்சனங்கள் குவிந்தன.

நான் ராய்ப்பூர் வனவிலங்கு காப்பகத்துக்கு சென்றிருந்தேன் என்பதை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிரூபிப்பதற்காக பிரதமர் புகைப்படம் எடுத்திருப்பாரோ? என்று ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார். நேருவின் ஜாக்கெட்டை (மேலங்கி) காப்பியடித்த மோடி, தற்போது புலிகளை படம் எடுக்கும் நேருவின் பழக்கத்தையும் காப்பி அடிக்க தொடங்கி விட்டார் என இன்னொருவர் கலாய்த்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என்னை கொல்வதற்காக அந்தப் புலியை ஏவிவிட நினைத்து பிரதமர் புலிக்கு பயிற்சி அளிக்கிறாரோ..? என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News