செய்திகள்

ஸ்ரீகாளஹஸ்தி விடுதி அறையில் தமிழக பக்தர் தற்கொலை

Published On 2016-11-04 06:05 GMT   |   Update On 2016-11-04 06:05 GMT
ஸ்ரீகாளஹஸ்தி விடுதி அறையில் தமிழக பக்தர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

தமிழ்நாடு கும்மடிகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (52). இவர், கடந்த 1-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவில் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத்தங்கினார்.

நேற்று முன்தினம் ராகு-கேது பூஜையில் பங்கேற்ற அவர், அறைக்கு வந்து படுத்துத்தூங்கினார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. விடுதி ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்ததால், அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, அறையில் தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி விடுதி ஊழியர்கள் ஸ்ரீகாளஹஸ்தி போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் விடுதிக்கு வந்து தியாகராஜனின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விடுதி அறையில் அவர் கைப்பட எழுதிய மரணக்கடிதம், கோவில் நித்ய அன்னதானத்திட்டத்துக்கு ரூ.501 வழங்கியதற்கான ரசீது, செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

அந்த மரணக்கடிதத்தில், ‘என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Similar News