செய்திகள்

பூரண மதுவிக்கு: பீகாரில் மது அருந்திய போலீஸ் அதிகாரி கைது

Published On 2016-10-28 11:41 GMT   |   Update On 2016-10-28 11:41 GMT
மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் மது அருந்திய போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
முசாபர்நகர்

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், மது விற்பனை, சாராய உற்பத்திக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மது அருந்துவதும் குற்றமாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

இந்த தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு கலால்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரே மது அருந்தியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

முசாபர்பூர் டவுன் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட போலீஸ் கிளப்பில் கலால்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையில் இருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் பகவான் சிங், பல்கலைக்கழக காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர் மீது மதுவிலக்கு தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Similar News