செய்திகள்

முதலமைச்சர் அகிலேஷ் உடன் இல்லாமல் இருக்கலாம், முலாயம் சிங் மகனுடன் எப்போது இருப்பேன்: அமர் சிங்

Published On 2016-10-27 14:36 GMT   |   Update On 2016-10-27 14:36 GMT
முதலமைச்சர் அகிலேஷ் உடன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் முலாயம் சிங் மகனுடன் எப்போது இருப்பேன் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதில் கட்சியின் தலைவர் முலாயம் சிங்கிற்கும், ஆட்சி பொறுப்பில் முதல்-மந்திரியாக உள்ள அகிலேஷ் யாதவிற்கும் இடையே வெளிப்படையாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

அகிலேஷ் யாதவின் ஒரு சித்தப்பா ராம்கோபால் அவருக்கு ஆதரவாகவும், மற்றொரு சித்தப்பா சிவ்பால் முலாயம் சிங்கிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த மோதலின் உச்சகட்டமாக அமைச்சரவையில் இருந்து சிவபால் யாதவ், நரட் ராய். ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ராம்கோபால் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். இது கட்சிக்குள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராம்கோபால் யாதவால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அமர்சிங் சந்தித்து வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

எனக்கு இரண்டு இளம் வயது மகள்கள் உள்ளனர். ராம் கோபால் யாதவின் அச்சுறுத்தலால் நான் இப்போது பயம் அடைந்துள்ளேன்.

என்னுடைய தியாகம் சமாஜ்வாடி கட்சிக்குள் நடக்கும் பூசல்களை முடிவுக்கு கொண்டு வரும் எனில், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நான் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் உடன் எப்போது இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News