காவிரி வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க 26-ந் தேதி வரை அவகாசம்: சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி:
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் ஒத்தி வைத்தது.
அப்போது அனைத்து தரப்பும் எழுத்துபூர்வமாக தங்களது வாதங்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. மேலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 2 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே மத்திய அரசு தம்முடைய எழுத்துபூர்வ பதிலை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு இருந்தது. இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு வருகிற 26-ந் தேதி (புதன் கிழமை) வரை கால அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கி இருந்தது. அதன்படி தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.