பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம்- வாரணாசிக்கும் செல்கிறார்
வாரணாசி:
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் உத்தரபிரதேசத்துக்கு ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) செல்கிறார். அங்குள்ள பண்டல்கந்த் பிராந்தியத்துக்கு உட்பட்ட மகோபாவுக்கு காலையில் செல்லும் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அப்போது முக்கிய திட்டமான பிரதம மந்திரி கிரிஷி சிசாய் யோஜனா திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் உரையாற்றுகிறார். இதில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இதைத்தொடர்ந்து வாரணாசி செல்லும் பிரதமர், அங்கு மாலையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றும் அவர், பின்னர் டெல்லி திரும்புகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் துணை ராணுவம் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளது. மேலும் சிறப்பு கமாண்டோ படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.