செய்திகள்

மோடி-ஆங் சான் சூகி சந்திப்பு: இந்தியா-மியான்மர் உறவு, எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை

Published On 2016-10-19 12:37 GMT   |   Update On 2016-10-19 12:37 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

மியான்மர் அரசின் சிறப்பு ஆலோசகரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஆங் சான் சூகி, அரசுமுறைப் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் முக்கிய துறைகளின் மந்திரிகள், மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர்.

கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கற்ற ஆங் சான் சூகி, நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். இதையடுத்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டு உறவுகள் புதிய உச்சத்திற்கு செல்லும் என்று சூகி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆங் சான் சூகி மற்றும் அவரது குழுவினர் சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசினார். அதன்பின்னர் இருநாடுகளின் நட்புறவு, வளர்ச்சி மற்றும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இத்தகவலை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ''கிழக்கில் இருந்து வந்துள்ள பழைய நண்பரும், மியான்மர் வெளியுறவு மந்திரியுமான ஆங் சான் சூகியை, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் வரவேற்றார்'' என்று அவர் டுவிட் செய்துள்ளார்.

இந்த சந்திப்பு மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டு பேசினர்.

Similar News