செய்திகள்

ஐதராபாத் நகரில் விரைவில் தூதரகம் திறக்கிறது ஆப்கானிஸ்தான்

Published On 2016-10-14 13:36 GMT   |   Update On 2016-10-14 13:37 GMT
ஐதராபாத் நகரில் ஆப்கானிஸ்தான் விரைவில் துணை தூதரகம் திறக்க உள்ளதாக ஆப்கான் தூதர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

ஐதராபாத் நகரில் ஆப்கானிஸ்தான் விரைவில் துணை தூதரகம் திறக்க உள்ளதாக இந்தியாவிற்கான ஆப்கான் தூதர் ஷாய்டா முகமது அப்தாலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் அப்தாலி கூறியதாவது:-

நாங்கள் ஐதராபாத்தில் ஒரு துணை தூதரகம் திறக்கப் போகிறோம். இந்த தூதரகம் மூலம் வர்த்தகம் மற்றும் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருநாடுகளிடையே அனைத்து மட்டங்களிலும் உறவை முன்னோக்கி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கலாச்சாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.

நடைமுறை சாத்தியங்கள் குறித்து ஆலோசனை செய்ய நான் இங்கு வந்துள்ளேன். அரசு தரப்பிலான ஒப்புதல்கள் கையெழுத்தாகிவிட்டன. விரைவில் எங்களது குழுவை ஐதராபாத்திற்கு அனுப்பி இடத்தை தேர்வு செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ’இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு’ மற்றும் ’தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம்’ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே தலைநகர் புதுடெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு தூதரகமும், மும்பையில் ஒரு துணை தூதரகமும் உள்ளது. அதனை தொடர்ந்து ஐதராபாத் நகரில் இரண்டாவது துணை தூதரகம் துவங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News