செய்திகள்

இதய மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மருத்துவ நிபுணர்கள் தகவல்

Published On 2016-09-29 12:25 GMT   |   Update On 2016-09-29 12:25 GMT
இந்தியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புது டெல்லி:

இதய தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், இதய நிபுணர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இதய மாற்று அறுவைசிகிச்சைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதற்கான முதன்மைக் காரணிகளாக இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் ஐ.சி.யூ-வில் நிகழும் மூளைச்சாவுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆகியவை கூறப்படுகிறது.

பல நேரங்களில் இதயங்கள் கிடைத்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவை அறுவை சிகிச்சை செய்யும் இடத்தை அடைய முடியாமல் போய் விடுவதும் முக்கிய காரணமென்று எய்ம்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரும், இருதய மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணருமான பல்ராம் ஐரன் கூறுகிறார். (பல்ராம் ஐரன் இந்தியாவின் முதல் இதய அறுவைசிகிச்சை குழுவில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது)
 
“இதய அறுவை சிகிச்சைகளைப் பொறுத்தவரை தென்னிந்தியாவை விட வட இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக தென்னிந்திய மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளது. அரசுகளும் இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் வேகமாக செயல்படுகின்றன. அதே நேரம் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை” என மூத்த இதய அறுவைசிகிச்சை நிபுணர்களில் ஒருவரான முகேஷ் கோயல் கூறுகிறார்.

உடல் உறுப்பு தானங்கள் தொடர்பான அறுவை சிகிச்சைகளைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 200 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் இங்கே நடைபெற்றுள்ளன. 60 அறுவை சிகிச்சைகளுடன் டெல்லி இரண்டாமிடத்திலும், 20 அறுவை சிகிச்சைகளுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தானில் அரிதாக ஒரே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.  

ஒருவரது உடலிலிருந்து எடுக்கப்படும் இதயம் 3-4 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News