செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அவதூறு வழக்கு: ராகுல் காந்தி கவுகாத்தி கோர்ட்டில் ஆஜர்

Published On 2016-09-29 08:11 GMT   |   Update On 2016-09-29 08:11 GMT
ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி கவுகாத்தி கோர்ட்டில் ஆஜரானார்.
கவுகாத்தி:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அவர் கவுகாத்தியில் உள்ள 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைஷ்ணவிதேவி கோவிலுக்கு சென்றார்.

அப்போது அவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தான் தன்னை தடுத்துவிட்டனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதற்கு அசாம் மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாங்கள் ராகுல் காந்தியை தடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாக ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கவுகாத்தி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கவுகாத்தி காம்ரூப் நகர முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருந்தார்.

இதை ஏற்று ராகுல் காந்தி இன்று காலை 10.30 மணிக்கு கவுகாத்தி கோர்ட்டில் ஆஜர் ஆனார். பின்னர் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

முன்னதான கவுகாத்தி வந்த ராகுல் காந்தி தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து கோர்ட்டுக்கு தொண்டர்களுடன் நடந்து வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஏழைகளையும், விவசாயிகளையும் சந்திப்பதை தடுக்கவே ஆர்.எஸ்.எஸ். மூலம் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Similar News