செய்திகள்

நடுவானில் பயணி செய்த ரகளையால் மும்பையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Published On 2016-07-28 11:18 GMT   |   Update On 2016-07-28 11:18 GMT
கோழிக்கோடு செல்லும் விமானத்தில் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பை:

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. இன்று காலையில் இந்தியாவை நெருங்கியபோது ஒரு பயணி ரகளையில் ஈடுபட்டார். விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், திடீரென உணவுப் பொருட்கள் வைக்கும் வண்டியில் ஏறி அமர்ந்துள்ளார். அத்துடன் தட்டிக்கேட்ட சக பயணியிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி விமான ஊழியர், விமானிக்கு தகவல் தெரிவிக்க, அவர் அருகில் உள்ள மும்பை விமான நிலையத்தின் தரைக்கட்டுப்பட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தை உடனடியாக தரையிறக்குவதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் மும்பை விமான நிலையத்தில் காலை 9.15 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டது.

ரகளையில் ஈடுபட்ட பயணி கீழே இறக்கப்பட்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.

விமானத்தில் பிரச்சனை செய்த பயணி, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக தகவல் வெளியானது. இதனை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Similar News