சுரண்டை அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
- பாஸ்கர் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
- இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சேர்ந்தமரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நெல்லை:
சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்து சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சத்யா (வயது 24).
பாஸ்கர் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்யா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் அங்கு விரைந்து வந்து சத்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசுவதாக கூறி அந்த வாலிபரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு சத்யா வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சேர்ந்தமரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் சத்யா மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.