உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூரில் டிரான்ஸ்பார்மரில் பழுதுபார்த்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

Published On 2023-10-30 09:33 GMT   |   Update On 2023-10-30 09:33 GMT
  • முருகேசன் பலத்த காயம் அடைந்தார்.
  • சம்பவ இடத்திலேயே வீரமணி பலியானார்.

திருவொற்றியூர்:

எர்ணாவூர்,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது45).மின்வாரிய ஊழியர். நேற்று இரவு எண்ணூர் முதல் திருவொற்றியூர் வரை மின்தடை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்தடையை சரிசெய்ய வீரமணி மற்றும் உடன் வேலை பார்த்து வரும் திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த முருகேசன் (55) உள்பட 4 ஊழியர்கள் வந்தனர். அவர்கள் திருவொற்றியூர், ஜீவன்லால் நகர் பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரமணியும், முருகேசனும் டிரான்ஸ்பார்மரில் ஏறி சரிசெய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீரமணி, முருகேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வீரமணி பலியானார்.

முருகேசன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான வீரமணிக்கு பாணு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். ஊழியர்கள் பழுதுபார்த்துக் கொண்டு இருந்தபோது டிரான்ஸ்பார்மரில் மின்சப்ளை எப்படி வந்தது? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வீரமணியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் அ.தி. மு. க. கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ்நிலையம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் திருவொற்றியூர் போலீசார் மற்றும் மின்வாரிய உதவி இயக்குனர் உதயசூரியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

Tags:    

Similar News