உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு-சோமனூரில் 2-வது நாளாக பெண்கள், பள்ளி மாணவிகள் போராட்டம்

Published On 2022-07-06 09:35 GMT   |   Update On 2022-07-06 09:35 GMT
  • பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மசூதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
  • பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருமத்தம்பட்டி:

சோமனூர் சவுடேஸ்வரி காலனி பகுதி உள்ளது. இங்கு பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மசூதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில், இந்த பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். அதில், குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க வேண்டாம் என கேட்டு கொண்டனர்.

இந்த நிலையில் மீண்டும் இந்த பகுதியில் மது கடை திறக்கப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தியதை தொடர்ந்து திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கப்படாது என உத்தரவாதம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். உத்தரவாத கடிதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News