உள்ளூர் செய்திகள்

வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் திடீர் போராட்டம்

Published On 2022-09-11 09:53 GMT   |   Update On 2022-09-11 09:53 GMT
  • திருச்சியில் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை மறுநாள் 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்சி ஜங்ஷன் ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்

திருச்சி:

திருச்சி மாநகராட்சி 49-வது வார்டு உட்பட்ட முடுக்குப்பட்டியில் கடந்த பல வருட காலமாக பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வீட்டை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் சி.பி.ஐ.எம். சார்பில் பொது மக்கள் இன்று அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ரெயில்வே நிர்வாகத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

பிறகு பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சிபிஐஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் மற்றும் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க தலைவர் கணேசன், செயலாளர் ராஜா, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முடுக்குப்பட்டியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை மறுநாள் 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்சி ஜங்ஷன் ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

Tags:    

Similar News