பொம்மிடியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றியதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு
- திடீர் நடவடிக்கைக்கு சிறு வியாபாரிகளில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடியில் ெரயில்வே ஜங்ஷன் முதல் ஓமலூர் சாலை மிகவும் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும்.
வாகனங்களில் செல்பவர்கள் ஆக்கிரமிப்பு கடைகள் நெடுஞ்சாலை வரை அமைத்து வியாபாரம் செய்ததால் வாகனம் செலுத்துவதுமிகவும் சிரமாக இருந்தது. இதனால் அடிக்கடி விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள், நெடுஞ்சாலை ஓரங்களிலும், பேரூராட்சிக்கு சொந்தமான இடத்திலும் ஆக்கிரமிப்பு செய்து போக்குவதற்கு இடையூறாக கடைகள் நடத்தி வந்தன.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இந்த பகுதியில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, சிலர் முன் பணமாக 50 முதல் ஒரு லட்சம் என பெற்றுக் கொண்டு வாடகைக்கு விட்டு வந்தனர்.
இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பேரூராட்சி செயலர் நாகராஜ், பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், கவுன்சிலர்கள் சிலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வாகனங்களுடன் 30-க்கு மேற்பட்டோர் சென்று ஆக்கிரமிப்பு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 50 சிறு வியாபாரிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு அடையாளக் குறியீடுகளை செய்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றவும் முயற்சி மேற்கொண்டனர். இந்த திடீர் நடவடிக்கைக்கு சிறு வியாபாரிகளில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி கடைகளை அகற்றியதை கண்டித்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஒன்று திரண்டு பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தனர்.
பொம்மிடி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்ட தால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.
இன்று கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.