பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருடிய வழக்கில் வாலிபர் கைது
- ஜோதிடம், மாந்திரீகம், போன்றவற்றை வீட்டில் வைத்து விமலாதேவி செய்து வருகிறார்.
- மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வாலிபர் தப்பிசென்றார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வசிப்பவர் விமலாதேவி ( வயது 58) .இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் ஜோதிடம், மாந்திரீகம், போன்றவற்றை வீட்டில் வைத்து செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 4ந்தேதி, இவரது வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் திருமண தோஷம் கழிக்க மந்திரித்து கயிறு கட்ட வேண்டுமென வந்துள்ளார்.
வீட்டை நோட்டமிட்ட அவர் மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, திடீரென மூதாட்டியின் வாயில் துணி வைத்து அடைத்து அவரை, அங்கிருந்த சேரில் உட்கார வைத்து கயிற்றினால் கட்டி போட்டுவிட்டு, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.
விமலாதேவி இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் கணபதிபாளையத்தில் விமலாதேவியை கட்டிப்போட்டு நகைகள் திருடியது தெரிய வந்தது .இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சசி மகன் சாஜன் லால்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.