மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் - உடுமலை மாநாட்டில் தீர்மானம்
- தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசினார்.
- மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது.
உடுமலை:
உடுமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.மாவட்டத்தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் குருசாமி கொடியேற்றினார். மாநிலச்செயலாளர் வில்சன் மாநாட்டை துவக்கி வைத்தார்.
தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசினார்.இதில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 1,000 ரூபாயிலிருந்து 3 ஆயிரமாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், சிறு, குறு தொழில் வணிக கடன் அலைக்கழிக்காமல் எளிதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவும், 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பாரபட்சமின்றி வேலை வழங்கவும், சமையல் கியாஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது.மருத்துவச்சான்று வழங்குவதை எளிமைப்படுத்தவும், செயற்கை அவையங்கள் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.