இ-ஆபிஸ் திட்டம் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
- இ-ஆபிஸ் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் ஒரு வருடத்துக்கு 31 டன் காகித தாள் சேமிக்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் இ-ஆபிஸ் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மின்னாளுமை மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல வேண்டும். பயனாளிகளை தேடி திட்டம் சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டுக்குள் 300-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த சேவைகளை நாம் மின்னணு உருவாக்கம் செய்து இ-சேவை திட்டம் மூலமாக வழங்க இருக்கிறோம். இ-ஆபிஸ் மிகப்பெரிய பயனை தருகிறது. அனைத்து அலுவலகத்திலும் இ-ஆபிஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பொறுத்து பார்த்தால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் ஒரு வருடத்துக்கு 31 டன் காகித தாள் சேமிக்கப்படுகிறது. இ-ஆபிஸ் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கு தகவல் தொழில் நுட்பத்துறை திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.