திருப்பத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்
- கால்வாய்களை தூர்வார கோரி நடந்தது
- 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர் :
திருப்பத்தூரில் கனமழையால் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஹவுசிங் போர்டு பகுதியில் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் அப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் வீடுகளில் இருந்த மிக்ஸி கிரைண்டர் மற்றும் பலவித பொருட்கள் சேதம் அடைந்தது.
பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது. இருந்தபோதிலும் ஹவுசிங்போர்டு பகுதி 2 அங்காளம்மன் கோவில் அருகே உள்ள நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்றும் இதனால் அந்த கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி உள்ளதாகவும் மீண்டும் மழை பெய்தால் தண்ணீர் வீட்டை சூழ்ந்து கொள்ளும் அபாயம் உள்ளது.
இதனால் உடனடியாக தூர்வார கோரி நேற்று மாலை 6 அளவில் ஹவுசிங் போர்டு சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியும் திருப்பத்தூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மூன்று பக்கத்தில் இருந்து வந்த வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நின்றது இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சம்பவஇடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
ஹவுசிங் போர்டு பகுதி1ல் இருக்கும் 100, மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை தூர்வார கோரி ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு மனு அளித்தனர்.