திண்டிவனத்தில் பரபரப்பு போலீஸ் நிலையத்திற்கு கத்தியுடன் வந்த வாலிபர்
- திண்டிவனத்தில் போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் கத்தியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த பகுதியில் குழந்தைகள் பெரியோர்கள் உள்ளனர். மெதுவாக செல் என்று கூறியுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாரதிதாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவர் அதே பகுதியில் இவரது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். அதனால் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (44) இவரிடம் ஏன் வேகமாக செல்கிறாய். இந்த பகுதியில் குழந்தைகள் பெரியோர்கள் உள்ளனர். மெதுவாக செல் என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சூர்யா தனது நண்பர்களான அய்யப்பன், பிரகாஷ், லோகநாதன் ஆகியோர் சென்று கிருஷ்ணனை அடித்து உதைத்து தாக்கினார். இதனைப் பார்த்த அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், சூரிய பிரகாஷ் நிர்மல் ராஜ் போன்றவர்கள் தடுக்க வந்தனர். தடுக்க வந்த இவர்களையும் சூர்யாவின் கும்பல் தாக்கியது. இதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் ஒருவருக்கொருவர் தாக்கி காயம் ஏற்பட்டது. இது குறித்து ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் விசாரணைக்காக ரோசனை போலீஸ் நிலையத்திற்கு இருதரப்பை சேர்ந்தவர்களும் வந்தனர். அப்போது சூர்யா தரப்பைச் சேர்ந்த அய்யப்பன் கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு விசாரணைக்கு வந்தார். இதை பார்த்த போலீசார் அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்குள்ளும் கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.