இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கிச்செல்லும் அவலம்
- சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.
- இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து சென்று மூதாட்டியின் உடலுக்கு தீ மூட்டினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாந்தாமாணிக்கம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மனைவி சீதாலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
சீதாலட்சுமியின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் சாந்தாமாணிக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.
உரிய சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.
இந்த மண் சாலையின் நடுவே திருமக்கோட்டை வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலின் நடுவே பாலம் இல்லாததால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை தண்ணிரில் இறங்கி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து சென்று மூதாட்டியின் உடலுக்கு தீ மூட்டினர்.
நம்நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போதும் முறையான சாலை வசதியோ பாலமோ இல்லாமல் கிராம மக்கள் அவதியுறுகின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணமாக அமைந்துள்ளது.
எனவே அரசு அதிகாரிகள், மாவட்ட நிறுவாகம் சாந்தாமானிக்கம் சுடுகாட்டிற்கு உடனடியாக சாலை மற்றும் பாலம் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.