உள்ளூர் செய்திகள்

கிண்டி பஸ் நிறுத்தத்தில் மனைவியுடன் தூங்கியவர் கழுத்தை அறுத்து கொலை

Published On 2022-11-27 08:40 GMT   |   Update On 2022-11-27 08:40 GMT
  • கார்த்திக்கை மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
  • தகவல் கிடைத்ததும் கிண்டி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை:

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக். 30 வயதான இவரது மனைவி பெயர் சந்தியா.

இவர் கிண்டி- வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக மனைவியுடன் தங்கியுள்ளார். அப்பகுதியில் பேப்பர் உள்ளிட்ட பழைய பொருட்களை பொறுக்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

நேற்று இரவும் கார்த்திக் தனது மனைவி சந்தியாவுடன் பஸ் நிறுத்தத்தில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று காலை கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இது தெரியாமல் மனைவி சந்தியா தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் சந்தியாவை தட்டி எழுப்பி, கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கூறினார்.

இதன் பிறகே அவருக்கு கணவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. கார்த்திக்கை மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மனைவி சந்தியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நேற்று இரவு 11 மணி அளவில் இருவரும் தூங்கினோம்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார்த்திக் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டது சந்தியாவுக்கு தெரியாமல் போனது எப்படி? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதற்கு விடை காண போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் கிண்டி பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News