உள்ளூர் செய்திகள்

பலியான சரவஸ்வதி

சாத்தூர் அருகே பாதயாத்திரை வந்த பெண் பக்தர் வாகனம் மோதி பலி

Published On 2022-08-11 05:14 GMT   |   Update On 2022-08-11 05:14 GMT
  • கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி என்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
  • படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தலையால் நடந்தாள் குளத்தை சேர்ந்த முருகன் பூசாரி என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இருக்கன்குடி கோவிலுக்கு பாதையாத்திரையாக வந்தனர்.

அவர்கள் இன்று காலை சாத்தூர் அருகே தோட்டிலோவன்பட்டி அருகே நடந்து வந்தனர். அப்போது கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி (வயது 65) என்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பலியான சரஸ்வதி உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News