உள்ளூர் செய்திகள்

சுருளி அருவியில் உற்சாகமாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்.

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- கும்பக்கரை, சுருளி அருவியில் பயணிகள் உற்சாக குளியல்

Published On 2022-10-02 04:02 GMT   |   Update On 2022-10-02 04:02 GMT
  • வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் வருகிற கார்த்திகை மாதத்திலும் நீர்வரத்து இருக்கும்.
  • சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் புனிதநீராடி செல்ல ஏதுவாக இருக்கும்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது சுருளி அருவி. இங்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேலும் அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தூவானம் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 53 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சீராகி உள்ளதால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர். வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் வருகிற கார்த்திகை மாதத்திலும் நீர்வரத்து இருக்கும். இதனால் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் புனிதநீராடி செல்ல ஏதுவாக இருக்கும்.

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தற்போது நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். பயணிகள் பாதுகாப்பு மற்றும் அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல்மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் உள்ளூர் மக்களும் அதிகளவில் வர தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News