உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் அருகே பழிக்குப்பழியாக நடந்த வியாபாரி கொலையில் முக்கிய கொலையாளி கைது

Published On 2023-11-08 05:52 GMT   |   Update On 2023-11-08 05:52 GMT
  • கொலை வழக்கில் சிவராஜ் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்தவர் வேம்படித்துரை ( வயது 42).

வியாபாரியான இவர் சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 5-ந் தேதி உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான வன்னிமாநகருக்கு வந்தார்.

அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்லும்போது ஒரு கும்பல் காரை ஏற்றியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுரு என்ற சிவலட்சம் என்பவர் கொலையில் வேம்படிதுரை உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்ததும், அதற்கு பழிக்குப்பழியாக வேம்படி துரை கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதற்கிடையே வேம்படிதுரை கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சொர்ண கோபி (32), சுதாகர் (25) ஆகியோர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சிவராஜ் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப் பட்ட சிவகுரு என்பவரின் சகோதரர் ஆவார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News