என்.எல்.சி.க்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு- கிராம மக்கள் முற்றுகை
- பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி நிலக்கரியை எடுத்து மின் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
- ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி நிலக்கரியை எடுத்து மின் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
அதன்படி என்.எல்.சி., 2-வது சுரங்கம் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 150 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி., நிறுவனம் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு அங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இன்று காலை கரிவெட்டி கிராமத்திற்கு கடலூர் மாவட்ட டி.ஆர்.ஒ., பூவராகவன் தலைமையில் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ய 10-க்கும் மேற்பட்ட காரில் வந்தனர்.
இதனைக் கண்ட அக்கிராம மக்கள் உடனடியாக ஒன்று திரண்டு அதிகாரிகள் வந்த கார்களை முற்றுகையிட்டு, அவர்கள் காரில் இருந்து இறங்க விடாமல் தடுத்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேசினர். அதிகாரிகள் இறங்கினால் தான் அவர்களிடம் உங்கள் கோரிக்கையை கூற முடியும் என்று கூறினர்.
இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகளிடம் கரிவெட்டி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு குடும்பத்திற்கு அதாவது ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு நபருக்கு என்.எல்.சி.,-யில் நிரந்தர வேலை வழங்க வேண்டும். அனைத்து குடும்பத்திற்கும் மாற்று இடம் 10-சென்ட் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை ஒப்புக் கொண்டால் நீங்கள் நிலத்தை அளவீடு செய்யலாம். இல்லையென்றால் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினர்.
இதற்கு என்.எல்.சி., அதிகாரிகள் ஏக்கர் 1-க்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், வேலை தரமுடியாது என்றும், வேண்டுமானால் அதற்கு பதில் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்குவதாகவும், மாற்று இடம் தர வாய்ப்பில்லை என்றும் கூறிவருகின்றனர்.
இதனை ஏற்க மறுத்து வரும் கரிவெட்டி கிராம மக்கள் அதிகாரிகளை அளவீடு செய்ய விடாமலும், நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்காமல் முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாகவும், பதட்டமாகவும் உள்ளது.